இந்து சமயக் கட்டடங்கள்

பொலனறுவைக் கால இந்து ஆலயங்கள் எல்லாமே சோழர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை யாகும். கி.பி. 1017 தொடக்கம் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அளவு காலம் பொலனறுவையை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த சோழர் காலத்தில் ஆட்சி மையமாகக் காணப்பட்ட பொலனறுவை ‘ஜனநாதபுரம்” எனவும் ஜனநாதமங்களம்” எனவும் அழைக்கப்பட்டது. மேலும் சோழர்கள் இலங்கைத் தீவை ‘மும்முடிச் சோழ மண்டலம்” எனவும் அழைத்தனர்.

மேற்படி சோழர் ஆட்சிக் காலத்துக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே இந்துக்கள் இலங்கையில் வாழ்ந்தமை கல்லேடுகளிலும் வம்சக் கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக பண்டுகாபய மன்னனின் காலத்தில் இந்து சமய வழிபாடுகளுக்காக கட்டடக்கலை நிர்மாணிப்புக்கள் காணப்பட்டமை அறியப்பட்டுள்ளது. அனுராதபுரக் காலத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு இந்து சமயக் கட்டடங்கள் பற்றிய தகவல்கள் உள்ள போதிலும் இந்துக் கட்டடக்கலை தொடர்பான கட்டடக்கலைச் சான்றுகள் கி.பி. 1017 தொடக்கம் காணப்பட்ட சோழர் ஆட்சிக் காலத்திலேயே காண முடிகின்றது. இலங்கைக் கலைமீது இந்து சமயம் சார்ந்த கலையின் காத்திரமான செல்வாக்குக்கு உள்ளாகியுள்ளது. ‘கொடிகே’ மாதிரியானது, பௌத்த கட்டடக் கலையில் பரம்பியமை இதற்கு ஓர் உதாரணமாகும். பௌத்த சிலை மனைகளின் அளவுக்கு இந்து ஆலயங்களில் பெரியவையாகக் காணப்படாத போதிலும் கூடக் கட்டடக்கலைத் திட்டம், படைப்பாக்கத்திறன் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் சம அளவு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

இந்துக்கட்டடக் கலை தொடர்பாகப் பிரஸ்தாபிக்கும் ஆனந்த குமாரசுவாமி இந்து ஆலயங்கள் மனிதர்களுக்காகவன்றி, தெய்வங்களுக்காகவும் அத் தெய்வங்களுக்கான பணிகளுக்காகவும் அமைக்கப்பட்டவையாகும் எனக் கூறுகின்றார். இந்தியாவைச் சேர்ந்த இந்து ஆலயங்களில் அடிப்படையான கட்டடக்கலைத் திட்டத்துக்கு இசைவாக நிர்மாணிக்கப்பட்ட பொலனறுவைக்கால இந்து ஆலயங்கள் கொடிகே’ மாதிரியுடன் கர்ப்பக்கிரகம் இழைக்கழி, பிரவேசவழி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தெய்வ உருவங்கள், அன்னம் மற்றும் தாமரைமலர் செதுக்கல் வேலைப்பாடுகளாலும் விமானங்களாலும் சுவர்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிர்மாணிப்புக்கள் ஒரு போது கருங்கல்லினாலும் மற்றொருபோது செங்கல் சேர்த்தும் அமைக்கப்பட்டுள்ளன.

பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்கள், பொலனறுவை மாவட்டத்தில் மட்டுமன்றி, திருகோணமலை, பதவியா, கந்தளாய் போன்ற பிரதேசங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலனறுவை மாவட்டத்திலேயே அதிக தொகை இந்து ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எச்.சீ.பீ. பெல் இனது தொல்பொருளியல் அறிக்கைகளின்படி, பொலனறுவையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்து ஆலயங்களின் தொகை 12 ஆகும். எனினும் எஸ். பத்மநாதன, பொலனறுவைக்கால இந்து ஆலயங்களின் தொகை 16 என எடுத்துக் காட்டியுள்ளார். இந்து ஆலய நிர்மாணிப்புக்காக அரசர்கள் மட்டுமன்றி வர்த்தகர்கள் மற்றும் சேனாதிபதிகளும் அனுசரணை வழங்கியுள்ளமை அறியப்பட்டுள்ளது. குறிப்பாக பொலனறுவை, பதவியா ஆகிய பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்கள் சார்ந்த கல்வெட்டுக்களின்படி ராஜராஜ மற்றும் முதலாம் ராஜேந்திரன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்து சமயக் கட்டடக்கலை நிர்மாணிப்புகளுள் சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கென அமைக்கப்பட்ட ஆலயங்களும் மட்டுமன்றி கணபதி, காளி போன்ற தெய்வங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்களும் இருந்துள்ளன. மேலும் பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்த இந்த இந்து ஆலயங்களுள் 1, 2, 3, 5 ஆம் இலக்க ஆலயங்கள் சிறப்பானவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. படமாக்கல் மற்றும் அறிக்கைப்படுத்தல் வசதிக்காகவே 1, 2, 3 என்றவாறாக இலக்கமிடப்பட்டதேயன்றி அவை கண்டுபிடிக்கப்பட்ட ஒழுங்கின்படி வழங்கப்பட்ட இலக்கங்களல்ல. இந்த ஆலயங்களை ஒப்பீட்டு ரீதியில் கற்றாய்வதன் மூலம் அவற்றின் கலைத்துவப் பண்புகளை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

error: Content is protected !!